Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வரின்னா என்னா?: கூலித் தொழிலாளி வங்கி கணக்கில் 1.47 கோடி பணப் பரிவர்த்தனை

பிப்ரவரி 05, 2020 05:30

ஒடிசா: ஒடிசாவில் கூலி வேலை செய்து வரும் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் வங்கி கணக்கில் ரூ.1.47 கோடி பண பரிவர்த்தனை நடந்துள்ளதால்  ரூ.2.59 லட்சம் வரி செலுத்தும்படி வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

ஒடிசா மாநிலம், புஜாரி பாராந்தி கிராமத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த சோனாதர் கோந்த், கூலித் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். சில நாட்களுக்கு முன், அவருக்கு ஒரு கடிதம் வந்துள்ளது. இதற்கு முன்னும் இதுபோன்று பல முறை கடிதம் வந்துள்ளது. அடிக்கடி வருகிறதே என்று சமீபத்தில் வந்த கடிதத்தை கிராமத்தில் உள்ள ஒரு நபரிடம் காட்டினார். அதை படித்த அவர் அதிர்ச்சி அடைந்தார். 

கோரபுட் மாவட்டத்தில் ஜெய்போரில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் இருந்து அந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருந்தது. கடந்த 2013-2014ம் ஆண்டில் கோந்தின் வங்கி கணக்கில் ரூ.1.47 கோடிக்கு பண பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளது. அதற்காக, ரூ.2.59 லட்சத்தை வரியாக செலுத்த வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை கேட்ட கோந்த், அதிர்ச்சியாகி விட்டார். அவர் இதுவரை ஒரு முறை கூட வங்கிக்கே சென்றது கிடையாது. அவருக்கு எழுத படிக்ககூட தெரியாது. 

இது பற்றி கோந்த் கூறுகையில், 'வணிகர் ஒருவரிடம் கடந்த 7 ஆண்டுகளாக கூலி வேலை செய்து வருகிறேன். அவரது மகன், எனது நிலப்பட்டா, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் கார்டு உள்ளிட்டற்றை வாங்கிக் கொண்டார், எனது கைவிரல் ரேகையையும் காகிதத்தில் அவர் எடுத்துக் கொண்டார். எனது வாழ்நாளில் ஒரு முறை கூட நான் வங்கிக்கே சென்றது கிடையாது. கிராமத்தை தவிர வேறு எங்கும் சென்றது கூட கிடையாது,' என்றார். இது பற்றி வருமான வரித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘வங்கி பரிவர்த்தனை அடிப்படையிலேயே அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகிறது,’ மேலும் இதுபற்றி விசாரணை நடைபெறுகிறது என்றனர்.

தலைப்புச்செய்திகள்